பணிகள் ஒதுக்கீட்டில் பாரபட்சம்கூட்டத்தில் வெளிநடப்பு
Posted on September 3rd, 2010 at 06:43 AM.
வேலைகளை கவுன்சிலர்களுக்கு பகிர்ந்து அளிப்பதில் பாரபட்சம் காட்டுவ தாக கூறி திண்டுக்கல் ஒன்றிய கூட்டத்தில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.திண்டுக்கல் ஒன்றிய கூட்டம் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க் கள் முருகேசன், அருள்சேகர், துணை தலைவர் சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியவுடன், ஆறு பணிகளுக்கான இணைப்பு அஜென்டா கவுன்சிலர்களுக்கு அளிக்கப்பட்டது. இதை பார்த்த எதிர்கட்சி கட்சி கவுன்சிலர்களான ராஜூ, மகாலட்சுமி, சித்ரா, வசந்தா, சரவணன், பட்டுமணி, ஜெயகணேஷ், விஜயராணி, செபஸ்தியார் ஆகிய 9 பேரும் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் கூறியதாவது: கவுன்சிலர்களுக்கு வேலைகள் பிரித்து தருவதில் தொடர்ந்து குளறுபடியும், பாரபட்சமும் காட்டப்படுகிறது.
நத்தம் தொகுதி என்பதால் சிறுமலை, வெள்ளோடு, அடியனூத்து, தோட்டனூத்து புறக்கணிக்கப் படுகிறது. பல தகவல்கள் அஜென்டாவில் மறைக்கப்படுகிறது. எங்களிடம் அஜென்டா அளிக்கும் போது 14 பணிகள் மட்டுமே இருந்தது. தற்போது 6 பணிகளை புதிதாக சேர்த்துள்ளனர். ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் நடக்கும் பணிகள் தரமானதாக இல்லை.இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றனர்.வெளிநடப்பு செய்தவர்கள் பின்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் நடந்த விவாதம்:பிரபு முனிசாமி: ஊரக கட்டமைப்பு நிதியில் ஒதுக்கியது போக, மீதியுள்ள நிதியை பணிகளுக்கு ஒதுக்க வேண்டும். செல்லமந்தாடியில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது.
சரவணன்: எனது பகுதிக்கு நிதி ஒதுக்கீடு வருவதே இல்லை. நிதி ஒதுக்கியவர்களுக்கே மீண்டும், மீண்டும் ஒதுக்கப்படுகிறது.
ராதாகிருஷணன்: மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்தால், கவுன்சிலர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.
பழனிவேல்: திண்டுக்கல் ராஜா குளத்தில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. இந்த பகுதியில் வாந்தி, பேதி, மலேரியா, டெங்கு நோய் பரவுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.



News Archives