அழகப்பா பல்கலை., மறு தேர்வு பழநியில் மாணவர்கள் புறக்கணிப்பு
Posted on August 26th, 2010 at 06:40 AM and last modified on August 27th, 2010 at 6:50 am.
அழகப்பா பல்கலை., நேற்று பழநியில் நடத்திய மறுதேர்வில், மூன்று மாணவர்கள் பங்கேற்றனர். பலர் தேர்வை புறக்கணித்தனர். காரைக்குடி அழகப்பா பல்கலை., தொலைநிலைக் கல்வி இயக்கக, பழநி மாணவர்களுக்கான மே 2010 செமஸ்டர் தேர்வு ஸ்டாண்டர்டு மெட்ரிக்., பள்ளியில் நடந்தது. புகாரின் அடிப்படையில், பல்கலை., பதிவாளர் செண்பகவல்லி மே 15ல் ஆய்வு செய்தார். பிட் அடித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை, அதிகாரிகள் பிடித்தனர். இம்மையத்தில் நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபடாதவர்களுக்கு, மறு தேர்வு நடத்தக் கூடாது என மாணவர்கள் பல்கலை.,க்கு கோரிக்கை வைத்தனர். பழநி மையத்திற்கான மறுதேர்வு, நேற்று முதல் துவங்கியுள்ளது. செப். 9 வரை தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு 80 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்திருந்தபோதும், மூன்று பேர் மட்டுமே பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்டோர், தேர்வை புறக்கணித்து மையத்தின் முன் கோஷமிட்டனர். மாணவி காளீஸ்வரி கூறியதாவது: ஸ்டாண்டர்டு பள்ளியில் தேர்வு நடந்தபோது, மே 15க்கு முன்பே சில படிப்புகளுக்கான தேர்வுகள் முடிந்து விட்டது. தேர்வு முடிவை எதிர்நோக்கி இருந்தோம். அதிகாரிகள், பிடிபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்துள்ளனர். முன்னதாக நடந்த தேர்வுகளையும், முறையாக தேர்வு எழுதியவர்களின் முடிவுகளையும் ரத்து செய்துள்ளனர். இது தொடர்பாக எந்த தகவலும், மாணவர்களுக்கு தெரிவிக்கவில்லை. மே 2010 தேர்வுகளை ரத்து செய்வதாகவும், ஆக. 25 முதல் மறுதேர்வு நடப்பதாகவும் பல்கலை., அனுப்பிய கடிதம் ஆக. 24ல் கிடைத்தது. போட்டோ இல்லாமல், ஹால் டிக்கெட் அனுப்பியுள்ளனர். திடீரென தேர்விற்கு தயாராக முடியவில்லை. தேர்வு பாடம், நாள் விபரங்களை, இன்டர்நெட்டில் பார்த்துக்கொள்ள தெரிவிக்கப்பட்டு இருந்தது. பலருக்கு இக்கடிதம் வரவில்லை. பல்கலை., மறுபரிசீலனை செய்து, மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். பல்கலை., அதிகாரி ஒருவர் கூறுகையில், “”மாணவர்கள் பாதிக்காத வகையில், தேர்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.



News Archives